Monday 13 December 2010

சுதந்திரம் என்பது...!

இன்றைய பொழுதில்-
யாவரு போலவே
அகதி முகாமில் விழித்திருக்கிறோம்..
உன்-
அழைப்பு, கை குலுக்கல் எல்லாம்...
வழமை போலத் தான்
பொம்பர்களுடன் நடை பெறுகிறது.!
நீங்கள்-
சுதந்திரமானவர்கள்...
என்ற படி
செல்களும் ஏவப் படுகின்றன...
உலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன்...!.
குழந்தை, குமரி
கூடவே-
அப்பனும், ஆதாளும்
வீடிழந்து நிற்கின்றனர்...!
கையொடிந்த ராஜாவானாலும்
சுப்பர் சொனிக் விரடும்...
வெடி குண்டுகளை-
வானத்தில் விதைத்துவிட்டு
நட்சத்திரங்கள் என்று
குழந்தைக்கு காட்ட முடியுமா?

யாவர்க்கும் அகதி முகம்...
பரிசளித்தது...
நிச்சயம் யார் என சொல்..!
விடை காணாது துடிக்கிறாய்.!
சூரியனைப் பிடித்து குழந்தைக்கு
பரிசளிக்க முடியவில்லையே...
என நிலவிடம்-
முறையிட்டால் எப்படி?
பூமி கிழிபடும் என மௌனித்தது போதும்..
உரத்துச் சொல்...
'சுதந்திரம் என்பது பற்றி'
வானம் நொருங்கட்டும்..!
-முல்லைஅமுதன்-
7/02/97

No comments:

Post a Comment