Monday 13 December 2010

வலிக்கின்ற மரணங்கள் -கவிஞர்। முல்லை அமுதன்



வண்ணத்துப் பூச்சி குரலெடுத்து-
ஓலமிட்டது….
என் இறக்கைகள் அறுபட்டு
தும்பியாவேனோ எனும் அச்சத்தில்-
தேர்தலாய் விடிகிறது!

***

முள்ளிவாய்க்கால் அவலம் உணர
பாராளுமன்ற சதுக்கத்தில்
பின்னர்-
தெருவில் இறங்கினோம்…
மரணங்கள் வலித்தன…!

***

பூகோளப்பந்தின் அதிபதி
விழித்திருக்கும் போது கூட
தூங்குபவர் போல் இருப்பவரிடம்
நெற்றிக் கண்ணை திறப்பார்
என எதிப்பார்க்க முடியாது..!
இது எரிகோள்களின் காலம் !
உடல்கள் பிணமாய் எரிகின்ற காலம்..!!

***

விரல் இடுக்கைகளில் இடப்படும்
மை அனைத்துமே
எம் மக்களின் குருதி
எனும் உண்மை எனியாகிலும் உணர்வோமாக!

***

இன்று
தங்கை தொடர்பில் வந்தாள்
அங்கு கொலை,
இங்கு கடத்தல்
அம்மம்மா அடித்துக் கொலை, களவு
அண்ணல் பற்றி சனத்திடையே உணரப்படுகிறதாம்….

***

பிணக் குவியல்களிடையே
நடந்து வந்த
என் மகன் முன்னே-
புத்தனின் தலையுடன்
இன்றைய அரசன்!
நிராயுதபானிகளாய் நாங்கள்!
மௌனித்த மானுடத்தின்
மூச்சுக்காற்று எங்கள் பூமியில்
கந்தகம் சுமந்து புற்களாய்
நிமிர்ந்து நிற்கின்றன….
மிதியாதீர் என தோழி
சொல்லிப் போனாள்
அசரீரியாய்….

***

எல்லாம் முடிந்தது என
விமானம் ஏறலாம்….
பியர் குடிக்கலாம்…
அதற்கு முன் எமக்கான
வலி நிவாரணி குடிக்கலாம்….
ஈழமாக….!!!

No comments:

Post a Comment