Sunday 20 January 2013

பொங்கல் பிச்சை
















உனக்கானது எனக்கும்
எனக்கானது உனக்கும்
வசமாக வேண்டும்.
அப்போது சொல்லு..
வாயார வாழ்த்துகிறேன்.
பொங்கிய நினைவுகளை நீயே
அழித்துவிட்டு-
வேடிக்கையா காட்டுகிறாய்?
எனக்கு பசிக்கிறது.
உணவில்லை.
நீ பிச்சையிடுகிறாய்!
இதை நட்பென்று எப்படிச் சொல்ல?
நீ சொல்லித் தானே
பாதுகாப்பானது என
வந்து இழந்தோமே?
குருதி காயவில்லை.
வாழ்த்து சொல்ல விரும்புகிறாய்.
முடியாது போ.
இன்னொரு யுக அழுகை உன்னால் வேண்டாம்.
என் முற்றத்தில் நாம் பொங்கும் காலம் வரும்.
அப்போது வா..
அன்னியனாகவே கை குலுக்கலாம்.
காலம் விரும்பினால்
சமமாய் பசியாறலாம்.
பிச்சை வேண்டாம்  போ!!
-முல்லைஅமுதன்
  11/01/13

எலி..!
















பொறிக்குத் தப்பியவை
தங்கள்
குழந்தைகளையும்
என் அறைக்கு
அறிமுகம் செய்து வைத்துள்ளன.
நல்ல வேளை
புத்தகங்களைத் தின்னும்
சூட்சுமத்தை இன்னும்
கற்றுத் தரவில்லை.
பொறி
நஞ்சு..
இப்போ சலித்துவிட்டது.
ஜீவன் பிரிவதைத் தாங்க முடிவதில்லை.

"ஜீவகாருண்யத் தலைவனாக்கலாமோ?"
நண்பர்கள் யோசிக்கின்றனர்.
துர்நாற்றம் பழகிவிட்டது.
அறை
புதிதாய்த் தேடுவது முடிகிறதா?
சுதந்திரமாகத் திரிகிறவைகள்
உடலை
தீண்டாமல் இருகாமல் இருக்கும்வரை
பாக்கியசாலிதான்.
கீச்சிடும் சத்தம் கூட
உடைந்த ரெக்கோட்டின் ஒலி போல்..
உறவுகள்
இழந்து வாழ்கின்ற எனக்கு
இவைகள் உறவுகள் போலத்தானோ?
வாழ்க எலிகளே!
    முல்லைஅமுதன்
      -2006

Friday 4 January 2013

2013




சென்ற ஆண்டு விலகிச் சென்றதில்
அதிக வருத்தம் இல்லை.
வரும் நிச்சயமாய்
அதிக நோவுகளைச்
சுமந்து வரத்தான் போகிறது எனப்தே!
என்னுள் உறைக்கிற
உண்மைகள்!
இது வரை வருந்தாத
உலகங்கள்
எனி எமக்காக
அழும் என்பதிலும்
கிஞ்சளவும் எதிர்பார்ப்பு இல்லை.
ஆடும் நனையும்!
ஓனாயும் அழும்!!
நான் நாமாக
மாறும் வரை
வருடங்கள் இனிக்காது!!

    முல்லைஅமுதன்
       03/01/2013

போராடுவோம் தமிழனாக













இன்னும்
நாம் முகமூடி மனிதர்களாய்
வாழத்தான் வேண்டுமா?
சதுக்கத்தில் நோன்பிருந்ததை
மறந்து புழுதிமண்ணைத்
தட்டியபடி
விமானம் எடுத்தோரே..
உங்கள் காணிகள் சுகமா?
முந்திப் பார்த்த சனமும் நலமா?
சிதைக்கப்பட்ட கல்லறைகளின்
மீதேறி
நின்றபடி
உரத்துச் சொல்லுங்கள்...
தமிழனென்று...
மாமனிதர்களின் வலி மறந்தோரே-
வெட்கமாக இல்லை...
அரசு தரும்..
இந்தியா தரும்..
ஐ.நா பெற்றுத் தரும்
என்று இலவசங்களை
எதிர்பார்க்கும் வீணர்களே..
விழி பிதுங்கி வலி அடக்கி
சாவினைத் தழுவிய எத்தனை மனிதங்கள்?
உலக முதலைகளிடம் மனிதங்களை
எப்படி எதிர்பார்ப்பாது?
முதலில் நாமே சுமக்க முனைவோம்...
குறைந்த பட்சம் மானுடம் காக்கும் மனிதர்களாக,
தமிழனாக இருப்போம்...
ஈழக் கனவுகள் நமக்கும்தான் என்பதை உணர்வோம்...
போராடுவோம்!

முல்லைஅமுதன்
09/12/12

Friday 31 August 2012

காலம் நாளைக் கிழித்தது.
வரம் கொடுக்க மறுக்கும்
தேவர்களுக்காக பூஜை செய்தாள் மனைவி.
முற்றத்தில் என்றுமே பூக்காத செடிகள்.
கவிதை சொன்னாள் மகள்.
இந்த-
நாளின் என் அன்பளிப்புக்காக
அவர்களும் காத்து நின்றார்கள்.
ஏனோ
மனம் உற்சாகமாயில்லை.

நரை மயிரின் சிரிப்பு
வயதை ஏளனமாய்ச் சொன்னது.
இதே பொழின் அன்றைய நாளில் தங்கை சிதைந்து வந்தாள்.
கொஞ்சமாயாவது
சிரிக்கச் சொல்லி
மகன்
புகைப்படக்கருவியுடன் வந்து நின்றான்.
சிரிப்பு மறந்த ஒரு பொழுது இன்றில் விடிந்திருக்கிறது.
நாட்குறிப்பில் எதை எழுதுவது?
சுடுமணல் குளிர்கிறது..கடுங்குளிர் சுடுகிறது.
நிலக் கண்ணிவெடியில் உடல் சிதறி
வீழ்ந்த என் அப்பா...விதவையாய் நின்றழுத என் தாய்..
இரவு கழிவதை அனுமதிக்கமுடியாது..
விடிதல் என்பது
இறத்தலேயாகும்..நாட்காட்டியின் இலைகள் உதிர்வதைப்போல..
வாழ்த்துசொல்ல வந்த உன்னிடம் தருவதற்கு
எதுவுமில்லை...கணங்களின் வலிகளைத் தவிர..
போ!
என்றாவது என் பொழுதுகள் விடிந்தால்
சொல்லி அனுப்புகிறேன்...
என் சிதையை வந்து பார்த்துவிட்டுப்போ!!
முல்லைஅமுதன்-27/08/2012

Friday 13 April 2012

மௌனமாய் சபதம் கொள்



உன் ஏளனம் புரிகிறது.
வாழத்தெரியாதவன் என்பது தெரிகிறது.
ஆனாலும் என்ன செய்ய?
பிடிக்கிறது என்பதற்காக
குழந்தைக்கு
புத்தாடை எடுக்கும் போது கூட-
ஊரார் குழந்தைகள் பற்றிய
நினைப்பும் வலிக்கிறது.
உனக்கு முடிந்திருக்கிறது.
அந்தக் குழந்தைகளின் நிர்வாணம் தான்
என்னை உடைகள் உடுத்த வைத்திருக்கிறது.
அந்த மனிதர்களின்
மரணம் தான் ஒரு குவளை
நீர் அருந்த வைத்திருக்கிறது.
ஆண்டாண்டு காலமாய்
வாழ்ந்து தளைத்திருந்த
மனித மரங்களைத்
தறித்து வீழ்த்தியவனிடம் மண்டியிடச் சொல்கிறாய்!
முடியாது போ!
வீர மரணம் எய்திய
உன் தங்கையை உயிர்ப்பித்துக்கேள்.
வாழ்வின் வலிமை பற்றி...
மரணம் சாதாரணமொன்றல்ல..!
எழுதியதை முடித்துக்கொள்ள இது ஒன்றும் சிறுகவிதையல்ல....
மானுட சரித்திரம்..ஒரு இனத்தின் மீதான இன சங்காரம்.
மண்டியிடச் சொல்லி
உலகின் வல்லூறுகள் செய்து முடித்த
வதை அந்தாதி.
ஒரு இனத்தின் யுகம் யுகமான
சோகத்தின் உச்சக் கட்டம்
நடந்து முடிந்த நாட்களை மறந்து
சன்னதமாடுகிறாய்.
வேண்டாம்.
இனியாவது சங்கல்பம் கொள்..
வதைகளின் கதைகளை
உன்-
குழந்தைக்கும் சொல்லிக் கொடு.
வதைகளைத் தந்தவன்
வதைபடும் வரை விரதம் இரு!
சூரசம்காரம்
கொள்ளும் அந்த நாள் வரும் வரை
மௌனத்தை அர்த்தப்படுத்து..!
பின்னர் வா...
புத்தாண்டாய் ஆடிக்கூழ் குடித்தபடி கொண்டாடுவோம்...!
-முல்லைஅமுதன்
-13/04/2012

Saturday 31 December 2011

காதலித்துப் பார்..!



உன்னையே காதலித்துப் பார்..
உலகம் உன்னுள் சுருண்டு கொள்ளும்..
காதலித்துப் பார்..!!
காதல் இல்லையேல் எதுவும் இல்லை..
காதலித்துப் பார்..!!!
யாதும் உன் விரல் சொடுக்குக்கு காத்திருக்கும்..
காதலித்துப் பார்..!!!!
ஏவுகணைகள் சேவகம் செய்யும்...
காதலித்துப் பார்..!!!!
ஈழம் உனக்கு வாய்த்திருக்கும்...!

-முல்லைஅமுதன்