Friday 31 August 2012

காலம் நாளைக் கிழித்தது.
வரம் கொடுக்க மறுக்கும்
தேவர்களுக்காக பூஜை செய்தாள் மனைவி.
முற்றத்தில் என்றுமே பூக்காத செடிகள்.
கவிதை சொன்னாள் மகள்.
இந்த-
நாளின் என் அன்பளிப்புக்காக
அவர்களும் காத்து நின்றார்கள்.
ஏனோ
மனம் உற்சாகமாயில்லை.

நரை மயிரின் சிரிப்பு
வயதை ஏளனமாய்ச் சொன்னது.
இதே பொழின் அன்றைய நாளில் தங்கை சிதைந்து வந்தாள்.
கொஞ்சமாயாவது
சிரிக்கச் சொல்லி
மகன்
புகைப்படக்கருவியுடன் வந்து நின்றான்.
சிரிப்பு மறந்த ஒரு பொழுது இன்றில் விடிந்திருக்கிறது.
நாட்குறிப்பில் எதை எழுதுவது?
சுடுமணல் குளிர்கிறது..கடுங்குளிர் சுடுகிறது.
நிலக் கண்ணிவெடியில் உடல் சிதறி
வீழ்ந்த என் அப்பா...விதவையாய் நின்றழுத என் தாய்..
இரவு கழிவதை அனுமதிக்கமுடியாது..
விடிதல் என்பது
இறத்தலேயாகும்..நாட்காட்டியின் இலைகள் உதிர்வதைப்போல..
வாழ்த்துசொல்ல வந்த உன்னிடம் தருவதற்கு
எதுவுமில்லை...கணங்களின் வலிகளைத் தவிர..
போ!
என்றாவது என் பொழுதுகள் விடிந்தால்
சொல்லி அனுப்புகிறேன்...
என் சிதையை வந்து பார்த்துவிட்டுப்போ!!
முல்லைஅமுதன்-27/08/2012

Friday 13 April 2012

மௌனமாய் சபதம் கொள்



உன் ஏளனம் புரிகிறது.
வாழத்தெரியாதவன் என்பது தெரிகிறது.
ஆனாலும் என்ன செய்ய?
பிடிக்கிறது என்பதற்காக
குழந்தைக்கு
புத்தாடை எடுக்கும் போது கூட-
ஊரார் குழந்தைகள் பற்றிய
நினைப்பும் வலிக்கிறது.
உனக்கு முடிந்திருக்கிறது.
அந்தக் குழந்தைகளின் நிர்வாணம் தான்
என்னை உடைகள் உடுத்த வைத்திருக்கிறது.
அந்த மனிதர்களின்
மரணம் தான் ஒரு குவளை
நீர் அருந்த வைத்திருக்கிறது.
ஆண்டாண்டு காலமாய்
வாழ்ந்து தளைத்திருந்த
மனித மரங்களைத்
தறித்து வீழ்த்தியவனிடம் மண்டியிடச் சொல்கிறாய்!
முடியாது போ!
வீர மரணம் எய்திய
உன் தங்கையை உயிர்ப்பித்துக்கேள்.
வாழ்வின் வலிமை பற்றி...
மரணம் சாதாரணமொன்றல்ல..!
எழுதியதை முடித்துக்கொள்ள இது ஒன்றும் சிறுகவிதையல்ல....
மானுட சரித்திரம்..ஒரு இனத்தின் மீதான இன சங்காரம்.
மண்டியிடச் சொல்லி
உலகின் வல்லூறுகள் செய்து முடித்த
வதை அந்தாதி.
ஒரு இனத்தின் யுகம் யுகமான
சோகத்தின் உச்சக் கட்டம்
நடந்து முடிந்த நாட்களை மறந்து
சன்னதமாடுகிறாய்.
வேண்டாம்.
இனியாவது சங்கல்பம் கொள்..
வதைகளின் கதைகளை
உன்-
குழந்தைக்கும் சொல்லிக் கொடு.
வதைகளைத் தந்தவன்
வதைபடும் வரை விரதம் இரு!
சூரசம்காரம்
கொள்ளும் அந்த நாள் வரும் வரை
மௌனத்தை அர்த்தப்படுத்து..!
பின்னர் வா...
புத்தாண்டாய் ஆடிக்கூழ் குடித்தபடி கொண்டாடுவோம்...!
-முல்லைஅமுதன்
-13/04/2012