Friday, 4 January 2013

போராடுவோம் தமிழனாக













இன்னும்
நாம் முகமூடி மனிதர்களாய்
வாழத்தான் வேண்டுமா?
சதுக்கத்தில் நோன்பிருந்ததை
மறந்து புழுதிமண்ணைத்
தட்டியபடி
விமானம் எடுத்தோரே..
உங்கள் காணிகள் சுகமா?
முந்திப் பார்த்த சனமும் நலமா?
சிதைக்கப்பட்ட கல்லறைகளின்
மீதேறி
நின்றபடி
உரத்துச் சொல்லுங்கள்...
தமிழனென்று...
மாமனிதர்களின் வலி மறந்தோரே-
வெட்கமாக இல்லை...
அரசு தரும்..
இந்தியா தரும்..
ஐ.நா பெற்றுத் தரும்
என்று இலவசங்களை
எதிர்பார்க்கும் வீணர்களே..
விழி பிதுங்கி வலி அடக்கி
சாவினைத் தழுவிய எத்தனை மனிதங்கள்?
உலக முதலைகளிடம் மனிதங்களை
எப்படி எதிர்பார்ப்பாது?
முதலில் நாமே சுமக்க முனைவோம்...
குறைந்த பட்சம் மானுடம் காக்கும் மனிதர்களாக,
தமிழனாக இருப்போம்...
ஈழக் கனவுகள் நமக்கும்தான் என்பதை உணர்வோம்...
போராடுவோம்!

முல்லைஅமுதன்
09/12/12

Friday, 31 August 2012

காலம் நாளைக் கிழித்தது.
வரம் கொடுக்க மறுக்கும்
தேவர்களுக்காக பூஜை செய்தாள் மனைவி.
முற்றத்தில் என்றுமே பூக்காத செடிகள்.
கவிதை சொன்னாள் மகள்.
இந்த-
நாளின் என் அன்பளிப்புக்காக
அவர்களும் காத்து நின்றார்கள்.
ஏனோ
மனம் உற்சாகமாயில்லை.

நரை மயிரின் சிரிப்பு
வயதை ஏளனமாய்ச் சொன்னது.
இதே பொழின் அன்றைய நாளில் தங்கை சிதைந்து வந்தாள்.
கொஞ்சமாயாவது
சிரிக்கச் சொல்லி
மகன்
புகைப்படக்கருவியுடன் வந்து நின்றான்.
சிரிப்பு மறந்த ஒரு பொழுது இன்றில் விடிந்திருக்கிறது.
நாட்குறிப்பில் எதை எழுதுவது?
சுடுமணல் குளிர்கிறது..கடுங்குளிர் சுடுகிறது.
நிலக் கண்ணிவெடியில் உடல் சிதறி
வீழ்ந்த என் அப்பா...விதவையாய் நின்றழுத என் தாய்..
இரவு கழிவதை அனுமதிக்கமுடியாது..
விடிதல் என்பது
இறத்தலேயாகும்..நாட்காட்டியின் இலைகள் உதிர்வதைப்போல..
வாழ்த்துசொல்ல வந்த உன்னிடம் தருவதற்கு
எதுவுமில்லை...கணங்களின் வலிகளைத் தவிர..
போ!
என்றாவது என் பொழுதுகள் விடிந்தால்
சொல்லி அனுப்புகிறேன்...
என் சிதையை வந்து பார்த்துவிட்டுப்போ!!
முல்லைஅமுதன்-27/08/2012

Friday, 13 April 2012

மௌனமாய் சபதம் கொள்



உன் ஏளனம் புரிகிறது.
வாழத்தெரியாதவன் என்பது தெரிகிறது.
ஆனாலும் என்ன செய்ய?
பிடிக்கிறது என்பதற்காக
குழந்தைக்கு
புத்தாடை எடுக்கும் போது கூட-
ஊரார் குழந்தைகள் பற்றிய
நினைப்பும் வலிக்கிறது.
உனக்கு முடிந்திருக்கிறது.
அந்தக் குழந்தைகளின் நிர்வாணம் தான்
என்னை உடைகள் உடுத்த வைத்திருக்கிறது.
அந்த மனிதர்களின்
மரணம் தான் ஒரு குவளை
நீர் அருந்த வைத்திருக்கிறது.
ஆண்டாண்டு காலமாய்
வாழ்ந்து தளைத்திருந்த
மனித மரங்களைத்
தறித்து வீழ்த்தியவனிடம் மண்டியிடச் சொல்கிறாய்!
முடியாது போ!
வீர மரணம் எய்திய
உன் தங்கையை உயிர்ப்பித்துக்கேள்.
வாழ்வின் வலிமை பற்றி...
மரணம் சாதாரணமொன்றல்ல..!
எழுதியதை முடித்துக்கொள்ள இது ஒன்றும் சிறுகவிதையல்ல....
மானுட சரித்திரம்..ஒரு இனத்தின் மீதான இன சங்காரம்.
மண்டியிடச் சொல்லி
உலகின் வல்லூறுகள் செய்து முடித்த
வதை அந்தாதி.
ஒரு இனத்தின் யுகம் யுகமான
சோகத்தின் உச்சக் கட்டம்
நடந்து முடிந்த நாட்களை மறந்து
சன்னதமாடுகிறாய்.
வேண்டாம்.
இனியாவது சங்கல்பம் கொள்..
வதைகளின் கதைகளை
உன்-
குழந்தைக்கும் சொல்லிக் கொடு.
வதைகளைத் தந்தவன்
வதைபடும் வரை விரதம் இரு!
சூரசம்காரம்
கொள்ளும் அந்த நாள் வரும் வரை
மௌனத்தை அர்த்தப்படுத்து..!
பின்னர் வா...
புத்தாண்டாய் ஆடிக்கூழ் குடித்தபடி கொண்டாடுவோம்...!
-முல்லைஅமுதன்
-13/04/2012

Saturday, 31 December 2011

காதலித்துப் பார்..!



உன்னையே காதலித்துப் பார்..
உலகம் உன்னுள் சுருண்டு கொள்ளும்..
காதலித்துப் பார்..!!
காதல் இல்லையேல் எதுவும் இல்லை..
காதலித்துப் பார்..!!!
யாதும் உன் விரல் சொடுக்குக்கு காத்திருக்கும்..
காதலித்துப் பார்..!!!!
ஏவுகணைகள் சேவகம் செய்யும்...
காதலித்துப் பார்..!!!!
ஈழம் உனக்கு வாய்த்திருக்கும்...!

-முல்லைஅமுதன்

Sunday, 25 December 2011

நூல்களும்....


நூல்கள் எனக்குச் சொந்தம்.
எதை இழப்பினும் அவற்றை இழக்கச் சம்மதமில்லை.
உனக்கு எப்படியோ?
எனக்குள் வலி எடுத்தது.
யாரோ வாள் எடுத்துச் செருகியதாய்
குருதி கொட்டுகிறது.
சுலபமாய்-
சொல்ல உனக்கு முடிந்திருக்கிறது.
அன்பை அறுப்பது போல ..!
முன்னரும்-
உறைவாளைச் செருகுவது போல
நூலை இடுப்பில் செருகிச் சென்றான் நண்பன்..
இப்போது நீ..!...
இதயத்தை தருமாப் போல நூலை உன் கையில் சேர்த்தேன்.
தொலைந்து விட்டதாய் சொல்கையில் மொத்தமும் இழந்ததாய்...
உயிர்ப்பென எழ வைப்பதே நூல் என்பதை எப்போது உணரப் போகிறாய்...?
இப்படிச் சொல்லி எவரையும் ஏமாற்றிவிடாதே....
என்னைப்போல இறந்து விடுவார்கள்...!
- முல்லைஅமுதன் -

Saturday, 5 February 2011


உருவாகும் போராளி!
இப்படி-
உட்கார்ந்து கொள்ள
உனக்கு முடிகிறது?
தந்தையைப் பற்றி
புகார் செய்ய
பொலிசிடம் போன
உன் தங்கை
கற்பழிக்கப்பட்டு
திரும்பி வரவும்..
பயங்கரவாதி என
கைது செய்யப்பட்ட
உன் தம்பி பற்றி
விசாரிக்கப்போன
உன் அம்மா
பிணமாய் வந்ததும்..,
இறந்த உடலைக் காட்டி
'இது உன் தம்பியா?'
என்ற போது
இல்லை என்று அழுதபடி
பொய் சொன்ன அக்காள்
நிரந்தரமாய்-
அழுகையைக் கட்டிக்கொண்டதும்..,
இதற்குப் பிறகும்
உட்கார்ந்து கொள்ள
உன்னால் முடிந்திருக்கிறது.!
ஒன்று சொல்வேன்-
உனக்குள்ளும்
ஒரு போராளி
உருவாகி கொன்ன்டிருக்கிறான்
என்பது எனக்குத் திடமாகத் தெரிகிறது!
-முல்லைஅமுதன் (-1994-)

Sunday, 23 January 2011


இன்று வரை..!
குடை வழி ஒழுகும்
மழை நிர்
குடி நீராகும்..
சேற்று நீர் முகம்
துடைக்கவும் ஆயிற்று!
நடை பாதை கூட
எங்கள் குடியிருப்பாயிற்று..
அகதி என்று சொல்லாதே!
இடப்பெயர்வு என
அடித்துச் சொல்லும் காற்று!
எனினும்..எனினும்..
இன்றுவரை-
ஹெலிக்கு, பொம்பருக்கு-
பயந்து விழுந்து அழுமே
என் குழந்தை!
நாளாந்த வலியாக இது தொடரும்..
முல்லைஅமுதன்.